சரயு நதியில்..
சீதையும் பூமிக்குள் மறைந்து லக்ஷ்மணனும் சரயுவில் இறங்கிய பின் ஜனகரின் மனைவி சுனயனா அந்த துக்கத்தில் இருந்த போது இன்னுமொரு அதிர்ச்சியை தாங்கிய செய்தி அயோத்தியில் இருந்து மிதிலை வந்தடைந்தது. ராமனும் பரதனும், சத்ருக்கனனும் சரயு நதியில் இறங்கி சித்தி அடையப் போகிறார்கள் என்பதே அது.
‘ராமனும், பரதனும், சத்துருக்கனனும் சித்தி அடையும் நாளில் நாமும் அயோத்தியில் இருப்பது நல்லது. கணவரை இழந்து நம் புதல்விகள் உணர்ச்சிவசப்பட்டு அழுவார்கள். நேரில் சென்று ஆறுதல் கூற வேண்டியது நம் கடமை’ என முகத்தில் சாந்தி தவழச் சொன்னார் ஜனகர். தன் கணவர் ஜனகர் எதற்கும் எப்போதும்
பதற்றப்படமாட்டார் என்பதை சுனயனா அறிவாள். அவர்கள் இருவரும் நேரே தேரில் சரயு நதிக்கரைக்குச் சென்றனர். நதியின் கரையில் ராமனும் பரதனும் சத்ருக்கனனும் தங்கள் மாமனார் மாமியாரின் வரவுக்காக காத்திருந்தார்கள். மூவர் முகத்திலும் தாங்கள் சித்தி அடைய முடிவேடுத்துள்ளதைப் பற்றி எந்த சலனமும்
இல்லை. அவர்கள் மரியாதை நிமித்தம் தங்கள் மாமனார் ஜனகரை வணங்கினார்கள். பின்னர் சுனயனாவிடமும் ஆசிபெற்ற அவர்கள் மெல்ல நடந்தார்கள். பரதன், சத்ருக்கனன் இருவரும் மாண்டவியிடமும் சுருதகீர்த்தியிடமும் விடை பெற்றுக் கொண்டார்கள். மக்கள் வியப்போடும் கலவரத்தோடும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே
அவர்கள் மூவரும் ஒன்றாக சரயு நதியின் பெருகிய வெள்ளத்தில் இறங்கி அதன் ஓட்டத்தோடு சேர்ந்து வெள்ளத்திலேயே மெல்ல மெல்ல நடக்கலானார்கள். சிறிது நேரத்தில் வெள்ளம் அவர்கள் தலைக்குமேல் ஓடத்தொடங்கியது. தலைக்குமேல் வெள்ளம் போய்விட்டதை உணர்ந்த மக்கள் “ராமா ராமா” என உணர்ச்சிப் பொங்க உரக்க கத்தினார்கள். ஊர்மிளை, மாண்டவி, சுருதகீர்த்தி மூவரிடமிருந்தும் பெரிய விம்மல்கள் வெடித்தெழுந்தன. அவர்கள் தங்கள் தாயைக் கட்டிக் கொண்டார்கள். தாய் சுனயனா அவர்கள் மூவரின் தோள்களையும் தட்டி தன்னால் இயன்ற அளவு அமைதிப் படுத்த முயன்றாள். அவள் விழிகளிலிருந்தும் கண்ணீர் இடைவிடாமல் வழியத்
தொடங்கியது. ஆனால் ஜனகர் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. ஊர்மிளை வியப்போடு கேட்டாள், “தந்தையே ! ஸ்ரீராமர் நம்மைவிட்டு நிரந்தரமாய் பிரிந்துவிட்டாரே, இனி நாம் அறத்தின் திருவுருவாக விளங்கிய அந்த அற்புதமான மனிதரைப் பார்க்கவே இயலாதே. உங்களுக்கு வருத்தமாக இல்லையா?” ஜனகர் முகத்தில் ஒரு
மெல்லிய புன்முறுவல் இழையோடியது. மாண்டவி, சுருதகீர்த்தி இருவரும் விழிகளைத் துடைத்துக் கொண்டு தங்கள் தந்தை சொல்லப் போகும் பதிலுக்காக அவர் முகத்தையே கூர்மையாகப் பார்த்தவாறு இருந்தார்கள். பொதுமக்கள் கூட ஜனகரின் பதிலை எதிர்ப் பார்த்துக் காத்திருந்தார்கள். ஜனகர் சாந்தம் தவழும்
முகத்துடன் இனிய குரலில் பரிவு பொங்கச் சொன்னார், “மனித உடல் என்பது உறை, ஆன்மா என்பது அந்த உறையிலிருக்கும் வாள். உடலுக்குத் தான் அழிவுண்டே தவிர ஆன்மாவுக்கு அழிவு கிடையாது. உடல் பயன்படாத நிலை தோன்றுமானால் இறைச் சக்தி உடல் என்ற உறையிலிருக்கும் வாளை உருவித் தன் கையில் வைத்துக்
கொள்கிறது. வாழ்க்கை அநித்தியமானதுதான். பிறக்கும்போதே இறப்பும் உறுதி செய்யப்பட்டு விடுகிறது. எந்த நாள் என்பது வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால் எல்லோரும் ஒருநாள் இறக்கப் போவது உறுதி. இதை என் மாப்பிள்ளைகள் உணர்ந்து விட்டார்கள். இந்தப் பிறவியில் நிறைவடைந்து விட்டார்கள்.
தாங்கள் வந்த கடமை முடிந்துவிட்டதை உணர்ந்து கொண்டு அதனால் தாங்களே விரும்பி சித்தி அடைந்து விட்டார்கள். ஆனால் அவர்களுக்கு மரணமென்பது இல்லை. என் மாப்பிள்ளைகள் நால்வரும் என் வளர்ப்பு மகள் சீதையும் தெய்வ வடிவங்களே என்ற பரம இரகசியத்தை நான் முன்பே அறிவேன். அவர்கள் மண்ணுலகில் மானிடர்களாகவசிக்கும்போது அந்த ரகசியத்தை வெளிப்படுத்த எனக்கு உரிமை வழங்கப்படவில்லை. இப்போது அவர்கள் விண்ணுலகம் சென்று விட்டதால் நான் அதைப் பகிரங்கப்படுத்தலாம்.” சுனயனா வியப்போடு கேட்டாள், ‘அப்படியானால் நம் மாப்பிள்ளைகள் தெய்வங்களா? என் செல்ல வளர்ப்பு மகள் தெய்வமேதானா?’
‘ஆமாம். ஒன்றை யோசி.
அவர்கள் தெய்வங்களாய் இல்லாவிட்டால் இத்தனை துன்பங்களை எப்படிச் சாந்தமாகத் தாங்கியிருக்க முடியும்? மானிடர்கள் அறநெறியில் வாழவேண்டும் என்பதை எடுத்துக்காட்டவே திருமால் இவ்விதம் அவதாரமெடுத்து வந்தார். அவதார நோக்கமும் காலமும் பூர்த்தியடைந்து விட்டதால் தெய்வங்கள் விண்ணுலகிற்கு சென்று
விட்டன. ஆனால் மண்ணிலும் அவர்கள் சக்தி நிரந்தரமாய்க் குடியிருக்கும். அவர்களை பிரார்த்தித்தால் அந்த பிரார்த்தனைகள் நிறைவேறும். இனி அவர்களுக்கு ஊர்கள் தோறும் ஆலயங்கள் எழும். அந்த ஆலயங்களில் உள்ள விக்கிரகங்களில் அவர்களின் அருள் சக்தி குடி கொள்ளும்.’
‘இதெல்லாம் உண்மைதானா? இதற்கு உங்களால் சாட்சி காட்ட முடியுமா?’
‘சாட்சி என்ன, என் தெய்வம் ராமன் திருவருளால் உங்களுக்கு ராமனையே நேரில் காட்டுகிறேன். எல்லோரும் அண்ணாந்து ஆகாயத்தை பாருங்கள்!’ ஜனகர் ஒரு கட்டளைபோல் இந்த வாக்கியத்தை கூறினார். பிரமிப்போடு அனைவரும் அண்ணாந்து வானத்தைப் பார்த்தார்கள். வானில் சடாரென
மேகங்கள் விலகி ராமபிரானும் சீதா தேவியும் லட்சுமணனும் பரத சத்துருக்கனர்களும் வலக்கரம் உயர்த்தி அனைவருக்கும் ஆசி கூறினார்கள். எல்லோரும் அவர்களைத் தரிசித்துக் கொண்டிருக்கும்போதே விந்தையான பல சம்பவங்கள் நிகழ்ந்தன. லட்சுமணன் உடல் ஒரு கனத்தில் ஆதி சேஷனாக மாறியது. ராமன் திருமாலாய் மாறி
அந்தப் பாம்பணையில் பள்ளி கொண்டான். மறுகணம் பரத சத்துருக்கனர்கள் சங்கு சக்கரங்களாக மாறி திருமாலின் கரங்களில் பொருத்திக் கொண்டார்கள். ஜனகரின் வளர்ப்பு மகளான சீதை இப்போது லட்சுமி தேவியாக விண்மகளானாள். அவள் திருமாலின் பாதங்களைப் பிரியமாய்ப் பிடித்துவிடத் தொடங்கினாள். மெல்ல மெல்ல
அந்த காட்சி மறைந்தது. மேகங்கள் மீண்டும் வைகுண்டத்திற்குத் திரையிட்டன. மக்களனைவரும் அளவற்ற மகிழ்ச்சியோடு ‘ஜெய் ஸ்ரீராம்‘ என உரத்து முழங்கினார்கள். அந்த முழக்கம் அந்த பிரதேசமெங்கும் நிறைந்தது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரின் குரல்களும் அந்த முழக்கத்தில் ஒன்றாய் இணைந்தன.
ஜனகரின் மனைவி சுனயனாதேவி புதல்விகள் மாண்டவி, ஊர்மிளை, சுருதகீர்த்தி அனைவரின் மனங்களும் இன்னதென்றறியாத சாந்தியிலும் நிறைவிலும் ஆழ்ந்தன. அவர்கள் இந்த அற்புத காட்சியைத் தங்களுக்குத் தரிசனம் செய்வித்த ஜனகரை நோக்கிக் கரம் கூப்பி வணங்கினார்கள். ராஜரிஷி ஜனகரின் மனம் ‘ராம ராம’ என ஓயாமல்
ஸ்ரீராமபிரானைத் தியானம் செய்யத் தொடங்கியது.
-திருமதி நளினி கோபாலன்